2024 ஆம் ஆண்டுக்கான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் சித்திரைப் புத்தாண்டு அழகுராணி போட்டி கடந்த 14 ஆம் திகதி கூட்டுத்தாபனத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இம்முறை சித்திரைப் புத்தாண்டு அழகு ராணியாக திசுரி தினேல்கா என்ற யுவதியும் சித்திரைப் புத்தாண்டு ஆணழகனாக ரவிந்து மதுஷான் என்ற இளைஞனும் மகுடம் சூடினர்.இப் போட்டிக்கு 14,000 இளைஞர்களும் 3,500 யுவதிகளும் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர். அவர்களில் இறுதிப்போட்டிக்கு 12 இளைஞர்களும் 12 யுவதிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதனிடையே அனுசரணையாளர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்தின் பேரில் பிரபலமான அழகு ராணி மற்றும் ஆணழகன் தெரிவுப் போட்டியும் நடைபெற்றது. நிகழ்வில் ஆக்க நெறியாள்கையை பத்தும் ஸசங்கு மேற்கொண்டிருந்தார். மாடலிங் நெறியாள்கையை ரொஷான் டயஸ், நடன நெறியாள்கையை கலாநிதி சன்ன விஜயவர்த்தன ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
நடுவர்களாக பிரபல மாடலிங் நெறியாள்கையாளர் ரொஷான் டயஸ், பிரபல நடனக் கலைஞர் சன்ன விஜயவர்த்தன, பிரபல நடிகர்களான தனஞ்சய சிறிவர்தன, ரொஷான் ரணவன, உதாரி பெரேரா, சஞ்சானி ஒனாலியுடன் பிரபல அழகுக் கலை நிபுணர் நதீஷா த சில்வா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ் வருட போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு கடந்த வருட வெற்றியாளர்களால் மகுடம் சூட்டப்பட்டது. வெற்றியாளர்களுக்கு தோள் பட்டியை அணிவித்து ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பரிசுகளை வழங்கினார்.
ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க, அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் அஜித் குணரத்ன நாரகல மற்றும் அனுசரணையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
tkn-04-17-pg05-R1