நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படலாம் என்றும் மின்னல் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கத்திற்கான ஆபத்துகள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, மேற்படி பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ள அத் திணைக்களம் மின்னல் தாக்கங்கள் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
(லோரன்ஸ் செல்வநாயகம்)