தந்தை செல்வா ஆரம்பம் முதல் இறுதி மூச்சுவரை அரசியலில் திறம்பட செயற்பட்டவர் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
தந்தை செல்வநாயகத்தின் 47 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு எழுச்சி கூட்டமொன்றை திருகோணமலையில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தனர்.
இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட தலைவர் ச.குகதாசன் தலைமையில் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான்,
தமிழரசு கட்சியின் ஆதரவின்றி இலங்கையை யாரும் வழி நடத்த முடியாது. இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு கட்சி. வட கிழக்கு மட்டுமல்ல முழு இலங்கை மக்களினதும் கொள்கை தீர்மானங்களில் சரியாக வழிநடாத்தினார்கள். தந்தை செல்வா அரசியலில் ஆரம்பம் முதல் இறுதி மூச்சு வரை திறம்பட செயற்பட்டவர். தந்தை செல்வாவின் கொள்கை இன்னும் வாழ்கிறது. தந்தை செல்வாவின் சிலையை திருகோணமலையில் அமைத்து தமிழரசு கட்சியுடன் இணைந்து பயணிப்பேன் என அவர் தெரிவித்தார்.
தம்பலகாமம் குறூப் நிருபர்