பாகிஸ்தானிலிருந்து நாட்டுக்கு கடத்தப்பட இருந்த இரண்டாயிரம் கோடி ரூபா மதிப்பிலான போதைப் பொருட்களை இந்திய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அரபியக் கடலில் நடத்தப்பட்ட சோதனையில் இவை கைப்பற்றப்பட்டன. குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு, போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் இந்திய கடலோர பொலிஸார் இணைந்து இந்த பாரிய போதைக் கடத்தலை முறியடித்தனர்.
அல் ராசா என்ற கப்பல் மூலம் இப்போதைப் பொருட்கள் நாட்டுக்கு கடத்தப்படவிருந்தன.
இச்சோதனை நடவடிக்கையில்,கப்பலிலிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த 14 பேரும் கைது செய்யப்பட்டதாக இந்திய கடலோர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மேலதிக விசாரணைக்காக குஜராத்திலுள்ள போர்பந்தருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இக்கடத்தல் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 12 இல், குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 480 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 3,400 கோடிக்கு மேற்பட்ட போதைப்பொருட்கள் குஜராத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.