இஸ்ரேலிலுள்ள இந்திய கட்டட நிர்மாணத் துறைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதுவர் நவோர் கிலோன் தெரிவித்துள்ளார்.
ஏ.என்.ஐ. க்கு வழங்கிய விஷேட நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
காஸா மோதல்கள் மற்றும் சமீபத்திய தாக்குதல்களால் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்திய கட்டட நிர்மாணத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஏ.என்.ஐ. எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், தொழிலாளர்களை நாம் இஸ்ரேலிய மக்களின் ஒரு பகுதியினராகவே கருதுகிறோம். அவர்கள் எமது மக்களில் இருந்து வேறுபட்டவர்கள் அல்லர். அதனால் இந்தியத் தொழிலாளர்களும் இஸ்ரேலிய மக்களைப் போன்றே பாதுகாக்கப்படுவர். இஸ்ரேலிலுள்ள அனைவரையும் பாதுகாக்கவென நாம் உச்சபட்ச நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.
60 க்கும் மேற்பட்ட இந்திய கட்டடத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் இம்மாதத்தின் ஆரம்பப்பகுதியில் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் இஸ்ரேலிய, இந்திய மக்களுக்கு இடையில் சிறந்த மக்கள் தூதுவர்களாக செயற்படுவார்கள் என நம்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வாராந்த செய்தியாளர் சந்திப்பில், ‘இஸ்ரேலிலுள்ள இந்திய தொழிலாளர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிப்படுத்துமாறு இஸ்ரேலிய அதிகாரிகளைக் கேட்டுள்ளோம்’ என்றுள்ளார்.