அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நீடிப்பதோடு அது ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியாவிலும் பரவியுள்ளது.
காசாவில் போர் நிறுத்தத்தைக் கோரிய இந்த ஆர்ப்பாட்டங்கள் இரண்டாவது வாரத்தை தொட்டுள்ளது. இதில் பல்கலைக்கழகங்கள் இஸ்ரேலில் இருந்து விலகும்படியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
இதனால் சில பல்கலைக்கழகங்கள் பட்டமளிப்பு விழாக்களை ரத்துச் செய்திருக்கும் அதேநேரம் மற்றும் சில பல்கலைக்கழகங்களின் ஒட்டுமொத்த கட்டடங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிதாக இணைந்திருக்கும் நியூயோர்க்கின் சிட்டி பல்கலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ‘இனப்பாகுபாட்டுக்கு தொடர்ந்து முதலீடு செய்யக் கூடாது’ போன்ற வாசகங்களை எழுதிய பாதாகைகளுடன் முகாம்களை அமைத்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் 700க்கும் அதிகமான மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு, சில இடங்களில் பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் சுமார் நூறு பேர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து மேலும் பல இடங்களுக்குப் போராட்டம் பரவியது.
மாணவர்களின் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த பல்கலைக் கழக நிர்வாகங்களும் சட்ட அமுலாக்கத் துறைகளும் சிரமப்படுகின்றன.