இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறு தன்மையில் அதிக செல்வாக்கு மிக்க நாடாக விளங்கும் இந்தியாவுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்று நெதர்லாந்தின் வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான அமைச்சர் லீஸ்ஜே ஷ்ரைன்மேக்கர் (Liesje Schreinemacher) தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையில் சுமார் 20 பில்லியன் ஈரோக்கள் பெறுமதியான பொருளாதார உறவு காணப்படுகின்ற போதிலும் அதனை மேலும் மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மும்பைக்கு விஜயம் செய்த நெதர்லாந்து அமைச்சர் ஏ.என்.ஐ. இக்கு வழங்கியுள்ள விஷேட பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளதோடு, புவிசார் அரசியலில் மாத்திரமல்லாமல் பொருளாதாரத்திலும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக விளங்கும் இந்தியாவுடனான நட்புறவை மேலும் மேம்படுத்த நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.
இப்பிராந்தியத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தியா இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் நிலைபேறு தன்மையிலும் அதிக செல்வாக்கு செலுத்தக்கூடியதாக உள்ளது. அதனால் இந்தியாவுடன் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் விரும்புகின்றோம்.
எமது நாட்டின் மெஜஸ்ரிக் என்ற பெயர் கொண்ட யுத்தக்கப்பல் செங்கடல் வழியாக தற்போது இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கு வருகை தந்துள்ளது. நெதர்லாந்து கடல்சார் வர்த்தக நாடாக இருப்பதால், எமது சுதந்திர வர்த்தகத்திற்கு கடல்சார் பாதுகாப்பு ஏற்பாடுகள் மிகவும் முக்கியமானது.
அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான பொருளாதார உறவு எவ்வளவு முக்கியமானதோ அதேபோன்று இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் நிலைபேறு தன்மையும் உலகின் பிற பகுதிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் தெரிவித்துள்ளார்.