வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ள எழில் நிறைந்த கிராமமான தல்கஸ்பிடியில் ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிவாசலின் நிர்வாக குழுவின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வரும் ஓர் அமைப்பே இந்த குர்ஆன் மத்ரஸாவாகும். பிள்ளைகளுக்கு ஈமானிய கல்வியை விருத்தி செய்யும் வகையிலே இவ் அமைப்பு தோற்றம் பெற்றுள்ளது.
2010 ஆம் ஆண்டு இக்குர்ஆன் மத்ரஸாவின் வளர்ச்சியின் முதற்கட்டம் ஆரம்பமானது. அதாவது அஷ்ஷேக் எஃப். ஹுவைரிஸ் (ஹஸனி) ஹஸ்ரத்தின் தலைமையின் கீழும் அவரது முயற்சியினாலும் குர்ஆன் மத்ரஸா, மத்ரஸதுல் அஸ்ஹரிய்யா என பெயர் மாற்றப்பட்டு இஸ்லாமிய கல்வி நடவடிக்கைகள் சீராக இயங்கத் தொடங்கின. அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மக்தப் திட்டம் உள்வாங்கி நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. தொடர்ந்தும் நிர்வாகத்தினரின் முயற்சியினாலும் அல்லாஹ்வின் உதவியினாலும் 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாணவர்களுக்கான குர்ஆன் மனன (ஹிப்ழ்) வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மத்ரஸதுல் அஸ்ஹரிய்யாவின் வளர்ச்சியில் மயில்கல்லாக 2023 ஆம் ஆண்டு அல்லாஹ்வின் உதவியுடன் மத்ரஸாவின் தற்போதைய அதிபர் அஷ்ஷேக். முப்ஃதி எம். எம். ஹிலால் ஜவாத் (ஹக்கானி, பின்னூரி) ஹஸ்ரத் அவர்களின் திட்டங்களும் செயற்பாடுகளும் அமைந்தன. மேலும் இவ்வளர்ச்சியில் அவருக்கு உறுதுணையாக கைகொடுத்த வாலிபர்களான சகோதரர்கள் எம். ஏ. ஸம்ரி அஹமத், எம். ஆர். எம். உமைர் ஆகியவர்களின் சுயேட்சையான ஒருமைப்பாட்டினால் மத்ரஸதுல் அஸ்ஹரிய்யாவின் பாடத்திட்டம் ஒன்று முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு அப்பாடத்திட்டங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் அமையப்பெற்றன. மேலும் இவர்களுடன் எம். என். எம். காலித், எம். எஸ். எம். சினாஸ் ஆகியோர் இணைந்து ஐந்து பேர் கொண்ட குழுவாக அஸ்ஹரிய்யா உதவிக் குழு என்னும் நாமத்துடன் பள்ளிவாசலின் நிர்வாகத்தின் கீழ் வெற்றி நடைபோடத் தொடங்கியது.
அந்த வகையில் மத்ரஸாவின் செயற்பாடுகள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டன. முதலாவது பகுதி கிஸ்முல் குர்ஆன் ஆகும். இது 5 வயது தொடக்கம் 9 வயதான மாணவர்களுக்கான குர்ஆனின் அடிப்படைகளும் மார்க்கத்தின் அடிப்படைகளும் போதிக்கப்படுகின்றன. இரண்டாவது பகுதி கிஸ்முல் தஃபீல் ஆகும். இது ஆண், பெண் மாணவர்களுக்கான பகுதி நேர குர்ஆன் மனன வகுப்பாகும். மூன்றாம் பகுதி கிஸ்முத் தத்ரீப் ஆகும். இது 6 தொடக்கம் 11 வகையான மாணவர்களுக்கான விஷேட பாடநெறியாகும். இப்பாடநெறியானது ரமழான் மாதத்தில் நடைபெறும். இதில் 2023 ஆம் ஆண்டு 65 மாணவர்கள் கலந்து பயன்பெற்றதைத் தொடர்ந்து இதற்கான முறையான பாடத்திட்டம் வகுக்கப்பட்டு வாய்மொழி மூல மற்றும் எழுத்து மொழி மூல பரீட்சைகள் நடத்தப்பட்டு வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு பரிசளிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் அஸ்ஹரிய்யா உதவிக் குழுவிற்கு புதிய அங்கத்தவர்களாக எம். என். அம்மார், எம். எஸ். எம். சகீர், எம். ஏ. அப்கர் மற்றும் எம். எஃப். எம். பாசில் ஆகியோர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். தொடர்ந்தும் 2024 ஆம் ஆண்டு மேலும் பல சீர்திருத்தங்களை உட்பட்டு கல்வி நடவடிக்கைகள் வளர்ச்சி அடைந்தன. அந்த வகையில் இவ்வாண்டு சுமார் 80 மாணவர்கள் பாடநெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்ததோடு அவர்களுக்கான முறையான பாடநூல் வழங்கப்பட்டது. இப்பாடநெறியில் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.
எஸ். சதுர்தீன் (J.P)
(மாத்தளை சுழற்சி நிருபர்)