அம்பாறை மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் மாவட்ட செயலாளர் சிந்தக்க அபேவிக்கிரமவின் ஆலோசனைக்கமைய வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியவற்றின் ஊடாக தேவைக்கேற்ப தொடர்ச்சியாக குடிநீர் பவுசர் மூலம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரட்சியினால் கால்நடைகள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு குடிநீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு சம்மந்தப்பட்ட பிரதேச கால்நடை வைத்தியதிகாரிகள் தகவல்களை வழங்கும் பட்சத்தில் கால்நடைகளுக்கு குடிநீர் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் தொகைக்கேற்ப பிரதேச செயலாளர்களின் அறிக்கைக்கமைய நிதி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கூறினார்.
ஒலுவில் விசேட நிருபர்