திருத்தந்தை பிரான்சிஸ்
ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது என்ற 133ஆம் திருப்பாடலின் வரிகளுக்கேற்ப தாத்தா பாட்டிகளும் பேரக்குழந்தைகளும் ஒன்றிணைந்து வத்திக்கான் புனித ஆறாம் பவுல் அரங்கில் குழுமிருக்க, அன்பே நம்மை மேலும் சிறந்தவர்களாகவும், வளமுடையவர்களாகவும், ஞானமுடையவர்களாகவும் எல்லா வயதிலும் ஆக்குகின்றது என உரை நிகழ்த்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
தாத்தா பாட்டிகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இடையே நிலவும் அன்பு மிகவும் உயரியது. ஒருவரை ஒருவர் மேன்மைப்படுத்துவதாக தாத்தா பாட்டிகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் இடையேயான அன்பு உள்ளது என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.
விசுவாசத்தை அனைவருடனும் பகிர தாத்தா பாட்டிகள் கொள்ளும் விருப்பமே அனைத்து தலைமுறைகளையும் இணைக்கிறது என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை,எவரையும் விலக்கிவைக்காமல் ஒருவருக்கொருவர் அன்புகூர நமக்கு உதவும் இயேசுவின் அன்பை நாம் நம் தாத்தா பாட்டிகளிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.
அன்பு நம்மை வளப்படுத்தும் என்ற கருத்தை எடுத்துக்கொண்ட திருத்தந்தை, பல்வேறு தனித்திறன்களைக் கொண்ட மக்கள் இருக்கும்போது அவர்களின் அறிவும் திறமையும் மற்றவர்களோடு பகிரப்படவில்லையெனில் நம் மனிதகுலம் இழப்பது மிக அதிகம்.
எனக்கு எவரும் தேவையில்லை என்று ஒதுங்கியிருப்பது தலைமுறைகளுக்குள் பிளவுகளையும் முதியவர்களின் தனிமையையயும் உருவாக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
முதியவர்களை வேண்டாம் என ஒதுக்கிவைத்து அவர்களை தனிமையில் வாடவிடும் நிலையை நாம் ஏற்றுக்கொள்கிறோமா, அதை நாம் விரும்புகிறோமா? என்ற கேள்வியையும் முன்வைத்தார் திருத்தந்தை.
நினைவுகளற்ற உலகில் பழங்கால நினைவுகளின் பொக்கிஷமாக இருக்கும் தாத்தா பாட்டிகளிடமிருந்து அந்த நினைவுகளின் அனுபவப் பாடத்தை பேரக்குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழைப்பை விடுத்த திருத்தந்தை, முதியோரும் பேரக்குழந்தைகளும் ஒருவருக்கொருவர் செவிமடுத்து ஒருவர் மீது ஒருவர் அக்கறை கொண்டு செயல்படும்போது இவ்வுலகமும் சமூகமும் புத்துயிர்பெற்று பலமடைகிறது எனவும் குறிப்பிட்டார்.
சுமார் 6000 தாத்தா பாட்டிகள் மற்றும் பேரக்குழந்தைகள் பங்குபெற்ற இந்த சந்திப்பை “Età Grande” மேன்மை வயது என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்