மத்திய கென்யாவில் கடும் மழைக்கு மத்தியில் அணையொன்று உடைபெடுத்ததை அடுத்து ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளனர்.
நகூரு பிராந்தியத்தில் நேற்று (29) இடம்பெற்ற அணை வெடிப்பினால் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டிருப்பதோடு வீதி ஒன்றும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உயிர்தப்பியவர்களை காப்பற்றுவதில் மீட்பாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று நகூரு ஆளுநர் சுசான் கிஹிகா தெரிவித்துள்ளார்.
விபத்தை அடுத்து கென்யாவில் தொடரும் மழை வெள்ளத்தினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. கென்யாவில் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத கன மழை பெய்து வருகிறது.
நீர்பிடிக்கும் பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்து வருவதால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கரையோரங்களில் வசிக்கும் 2 இலட்சம் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.