போசாக்கு மட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்புத் திட்டத்திற்கமைய அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவசமாக 10 கிலோ அரிசி விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ்.ஜெகதீசன் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டலுக்கமைய நாடு தழுவியரீதியில் இலவசமாக அரிசி விநியோகிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பு ஊடாக தெரிவு செய்யப்பட்ட சிறிய, நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மூலமாக அரிசியை பெற்று பிரதேச செயலகங்கள் ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமுர்த்தி பயனாளிகள், சமுர்த்தி கொடுப்பனவுக்காக காத்திருப்போர் பட்டியலிலுள்ள குடும்பங்கள், முதியோர் கொடுப்பனவு பெறுவோர், விசேட தேவையுடையோர் ஆகியோருக்கு இலவசமாக அரிசி விநியோகிக்கப்படவுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு தலா 10 கிலோ அரிசி என்ற அடிப்படையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
(ஒலுவில் விசேட நிருபர்)