ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக, உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய E-commerce என்ற மின்னணு வர்த்தக தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இப்பொருட்களை விற்பனை செய்யும் பொறுப்பை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது.இதையடுத்தே இந்த இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் மூலம் வணிகர்களுக்கும் (Business to Business) மற்றும் பாவனையாளர்களுக்கும் இடையேயான பரிவர்த்தனைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன. இதற்காக இணையத் தளத்தில் பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவின் ஆலோசனைக்கமைவாக, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை, கட்டுபெத்த லக்கம் விற்பனை நிலையத்தை மையமாகக் கொண்டு சிலோன் பிளாசா Ceylon Plaza என்ற வர்த்தக தளத்தை முன்னெடுத்துள்ளது.
இதனால்,எந்தவொரு பொருளையும் இணையவழி மூலம் கோருவதற்கும், அதற்கு பணம் செலுத்தவும், பொருட்கள் மற்றும் சேவைகளை விற்கவும் வழி ஏற்பட்டுள்ளது.
சிலோன் பிளாசா வர்த்தகத் தளம் உருவாக்கப்பட்டதன் முக்கிய நோக்கம், உள்ளூர் தொழிலதிபர்களின் சிறந்த மற்றும் ஆக்கபூர்வமான தயாரிப்புகளுக்கு அதிக சந்தை வாய்ப்பை பெற்றுக்கொடுப்பதும், உள்ளூர் தொழிலதிபர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய e-commerce மற்றும் e-finance முறைகளை பயன்படுத்துவதுமே.
இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் கலாநிதி சாரங்க அழகப்பெரும இதுபற்றித் தெரிவித்துள்ளார்.
“இந்த சிலோன் பிளாசா மின்னணு வர்த்தக தளத்தின் மூலம், உற்பத்தியாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்தி, அவர்களை புதுமையான தொழில்முனைவோராக மேம்படுத்த முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, சிலோன் பிளாசா இ-காமர்ஸ் தளத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான மற்றும் பாரிய அளவிலான தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுப்பதாகவும் ஏற்றுமதி சபைத் தலைவர் மேலும் கூறினார்.