அமெரிக்காவின் பெல்டிமோர் நகரில் உள்ள பிரதான பாலம் ஒன்று சரக்குக் கப்பல் மோதியதை அடுத்து நேற்று (26) இடிந்து விழுந்துள்ளது. இதில் பல வாகனங்களும் 20 பேர் வரையும் நீரில் விழுந்துள்ளனர்.
கொள்கலன் கப்பல் ஒன்று பிரான்சிஸ் ஸ்கொட் பாலத்தில் மோதியதை அடுத்து அந்த பாலத்தின் ஒட்டுமொத்த இரும்புக் கட்டமைப்பும் படப்ஸ்கோ நதியில் சரிந்து விழும் காட்சி சி.சி.டி.வி. கெமராவில் பதிவாகியுள்ளது. இதன்போது அங்கிருந்த வாகனங்களும் நதியில் விழுந்துள்ளன.
பாலம் முழுவதுமாக தண்ணீரில் இறங்குவதை சமூக ஊடகங்களில் வெளியான காணொளிகளில் காண முடிகிறது. மோதிய கப்பல் சிங்கப்பூர் கொடியுடன் வந்ததாகத் தெரியவந்துள்ளது. 300 மீற்றர் நீளம் கொண்ட இந்தக் கப்பல் இலங்கையின் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது.
சம்பவ இடத்தில் அதிக உயிருடற்சேதம் நிகழ்ந்திருப்பதாகத் தீயணைப்புத் துறைப் பேச்சாளர் கூறியுள்ளார். ஆனால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இதன்போது தண்ணீரில் தத்தளித்த பலரும் மீட்கப்பட்டுள்ளனர்.
1.6 மைல் தூரம் உடைய நான்கு பாதைகள் கொண்ட இந்தப் பாலம் பல்டிமோர் நகரின் தென் மேற்காக படப்ஸ்கோ நதிக்கு மேலால் அமைந்துள்ளது. 1977 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தப் பாலத்தின் மூலம் வருடத்திற்கு 11 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கின்றன.