இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தொடைப் பகுதியில் உபாதைக்கு உள்ளாகி உலகக் கிண்ணத்தில் இருந்து விலகிய நிலையில் அவரது இடத்திற்கு சாமிக்க கருணாரத்ன அழைக்கப்பட்டிருப்பதோடு, இலங்கை ஒருநாள் அணியின் 26ஆவது தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசியாக நடந்த உலகக் கிண்ணப் போட்டியின்போதே தசுன் ஷானக்கவுக்கு உபாதை ஏற்பட்டுள்ளது. அவர் உபாதையில் இருந்து மீண்டு வருவதற்கு மூன்று வாரங்கள் வரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காலப் பகுதிக்குள் இலங்கை அணி உலகக் கிண்ணத்தின் பெரும்பான்மையான ரவுன் ரொபின் சுற்றுப் போட்டிகளில் ஆடி முடித்திருக்கும் நிலையிலேயே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய பின் வரிசையில் துடுப்பெடுத்தாடக் கூடிய பந்துவீச்சு சகலதுறை வீரர் கருணாரத்ன இலங்கை குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார். தசுன் ஷானக்க துடுப்பாட்டத்தில் வலுவாக செயற்படும் நிலையில் கருணாரத்ன பந்துவீச்சிலேயே வலுவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாரத்ன உலகக் கிண்ணத்திற்கான இலங்கைக் குழாத்துடன் மேலதிக வீரராக இந்தியா பயணித்திருந்தார். இந்நிலையில் இன்று (16) நடைபெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் அவர் இலங்கை அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கை அணியின் உப தலைவராக செயற்பட்டு வந்த குசல் மெண்டிஸ் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவர் தசுன் ஷானக்க பங்கேற்காத நிலையில் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் இலங்கை அணியை வழிநடத்தி இருந்தார். எனினும் இதுவரை அவர் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணித் தலைவராக செயற்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் 2015ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை ஒருநாள் அணியின் 11ஆவது அணித் தலைவராகவே அவர் செயற்படவுள்ளார். அவர் இலங்கை ஒருநாள் அணியின் 26 ஆவது தலைவராகவே பதிவாகவுள்ளார்.
தசுன் ஷானக்க அணியில் இருந்து விலகியபோதும் அவர் தொடர்ந்தும் அணியுடன் இருப்பார் என்று அணி முகாமையாளர் மஹிந்த ஹலன்கொட தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் தசுன் ஷானக்க இலங்கை பதினொரு வீரர்களில் இடம்பெறுவதில் கடந்த சில மாதங்களாக பெரும் நெருக்கடி இருந்து வந்தது. துடுப்பாட்டத்தில் சோபிக்கத் தவறிவரும் அவர் கடைசியாக ஆடிய 15 ஒருநாள் இன்னிங்ஸ்களில் ஒரு முறையே 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றுள்ளார். எனினும் அவரின் தலைமையின் கீழ் இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டு வந்தது. உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் தோல்வியுறாத அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற இலங்கை அணி அண்மையில் பெரும்பான்மையான போட்டிகள் இலங்கையில் நடைபெற்ற ஆசிய கிண்ண தொடரின் இறுதி இறுதிப் போட்டிவரை முன்னேறியது.
இந்நிலையில் உலகக் கிண்ணத்தை மோசமாக ஆரம்பித்த இலங்கை அணி முதல் இரு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது. இந்த இரு போட்டிகளிலும் இலங்கை அணி மொத்தமாக எதிரணிக்கு 775 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு பந்துவீச்சு சகலதுறை வீரர் ஒருவர் இணைக்கப்பட்டிருப்பது சாதகமானதாக கருதப்படுகிறது. எவ்வாறாயினும் இலங்கை அணிக்கு மற்றொரு பின்னடைவாக வேகப்பந்து வீச்சாளர் மதீச பதிரனவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக அவர் குறைந்தது ஒரு வாரம் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.