ஊழலுக்கு எதிரான சட்டத்தில் சில சரத்துக்கள் திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக் ஷ தெரிவித்துள்ளார். நாளை செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் இந்த வாரத்தின் வெள்ளிக்கிழமையன்று திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள சரத்துக்கள் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக சபையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2023/ 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.எவ்வாறாயினும் அந்த சட்டத்தில் நிறைவேற்று சபை என்ற சரத்திற்குப் பதிலாக அரசியலமைப்பு சபை என்றும் நிறைவேற்று சபை என்பதற்கு பதிலாக அரசியலமைப்பு சபை என்ற சரத்தும் புதிய திருத்தத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையளவில் அந்த திருத்தப்பட்ட சரத்து பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. மேற்படி குறைபாடு காரணமாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நியமிப்பு உள்ளிட்ட சில விடயங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்ற போதும் அவ்வாறான பாதிப்புகள் எதுவும் கிடையாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்