பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மின்னல் தாக்கியும் கடும் மழை காரணமாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் புயல், வெள்ளம் காரணமாக குறைந்தது 50 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் நேற்று (16) தெரிவித்தனர். அங்கு அவசர சேவைகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலும் உயிரிழப்பு 50ஐ தாண்டியுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துங்வாவிலேயே அதிக உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அடைமழை மற்றும் திடீர் வெள்ளத்தில் வீடுகள் சேதமடைந்து, மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டிருப்பதோடு நிலச்சரிவுகளும் பதிவாகியுள்ளன. இதில் கோதுமை அறுவடையின்போது மின்னல் தாக்கி விவசாயிகள் சிலரும் கொல்லப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அண்மைய நாட்களாக பெய்து வரும் பருவ மழையால் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டு 36 பேர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டு தேசிய அனர்த்த முகாமை நிர்வாகம் தெரிவித்துள்ளது.