Monday, April 29, 2024
Home » டெங்கு நுளம்பு பரவ ஏதுவான காணிகளை வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

டெங்கு நுளம்பு பரவ ஏதுவான காணிகளை வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை

by mahesh
November 22, 2023 11:40 am 0 comment

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான வெற்றுக் காணிகளை வைத்திருப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் தற்போது பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் சுகாதார வைத்தியதிகாரி பிரிவுகள் தோறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவினர், டெங்கொழிப்பு செயலணி, சமூக மட்ட தலைவர்கள் ஆகியோர் வீடு வீடாகச் சென்று டெங்குநோய் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் வாரத்தில் ஒரு நாள் தங்களது வீடுகளையும் சுற்றுப்புறச் சூழலையும் துப்புரவு செய்ய வேண்டுமெனவும், டெங்கொழிப்பு தொடர்பான ஆலோசனைகள் தேவைப்படும் பட்சத்தில் சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாமெனவும் அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தினாலும், அதிகாரிகளினாலும் இவ்வாறான வேலைத்திட்டங்களை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைத்தால் தான் டெங்கொழிப்பு நடவடிக்கையை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு இலகுவாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தேங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக தமது இடங்களை வைத்து கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒலுவில் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT