மன்னார் பறவைகள் கழகம் (MBC) தனது முதலாவது பொது நிகழ்வினை மன்னாரில் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இதனடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை (2) காலை 7.00 மணி தொடக்கம் 9.30 மணி வரை மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள கோரைக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பறவைகள் கண் காணிப்பகத்தில் பறவைகளைப் பார்வையிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து காலை 10.00 மணி தொடக்கம் பகல் 12.00 மணி வரை மன்னார் தேசிய இளைஞர் படை பயிற்சி நிலையத்தில் பறவைகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வில் அனைவரும்வருகை தந்து சிறப்பித்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகளின் இலங்கைக்கான நுழைவாயிலாகவும், சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்கும் பிரசித்தி பெற்ற பறவைகள் அதிகம் காணப்படும் இடமாகவும் மன்னார் மாவட்டம் திகழ்கின்றது.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறிய கருமுதுகுக் கடற்காக்கை (Heuglin’s gull) மன்னாரில் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் குறியிடப்பட்டு,”மேகா”என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அது உயர்ந்த இனப்பெருக்கம் செய்யும் தனது இடமான ஆர்ட்டிக்கிலிருந்து அதிசயிக்கத்தக்க வகையில் மூன்றாவது தடவையாக இலங்கைக்கான தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் குறியிடப்பட்ட நாளிலிருந்து இது வரை “மேகா” 65,000 கி.மீ. வரை,பயணித்துள்ளது.
மேலும் இந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு, மன்னார் பறவைகள் கழகத்தின் (MBC) 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அங்கத்துவத்தை இலவசமாக வழங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மன்னார் குறூப் நிருபர் – எஸ்.றொசேரியன் லெம்பேட்