நடப்பு IPL சீசனின் 45ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இதில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது RCB. வில் ஜேக்ஸ், 41 பந்துகளில் சதம் விளாசி RCB வெற்றி பெற உதவினார்.
இந்தப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ், 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 200 ஓட்டங்கள் எடுத்தது.
அந்த அணியின் துடுப்பாட்ட வீரர்களில் சாய் சுதர்ஷன் 84 ஓட்டங்கள் , ஷாருக்கான் 58 ஓட்டங்கள் மற்றும் டேவிட் மில்லர் 26 ஓட்டங்கள் எடுத்தனர். RCB பந்துவீச்சாளர்களில் சிராஜ், ஸ்வப்னில் சிங் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.
201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை RCB விரட்டியது. கேப்டன் டூப்ளசி 12 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து வில் ஜேக்ஸ் களத்துக்கு வந்தார். கோஹ்லி மற்றும் ஜேக்ஸ் என இருவரும் குஜராத் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர்.
16 ஓவர்களில் 206 ஓட்டங’களை எட்டிய RCB 9 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது. ஜேக்ஸ், 41 பந்துகளில் சதம் பதிவு செய்தார். 5 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை அவர் விளாசினார். கோலி, 44 பந்துகளில் 70 ஓட்டங்கள் எடுத்தார். குஜராத் அணியின் ரஷித் கான், மோகித் சர்மா மற்றும் நூர் அகமது போன்ற பந்து வீச்சாளர்கள் அதிக ஓட்டங்களை கொடுத்திருந்தனர். 10 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்றுள்ளது RCB.
ஆட்ட நாயகன் விருதை வில் ஜேக்ஸ் பெற்றார். ரஷித் கான் வீசிய 16ஆவது ஓவரில் 29 ஓட்டங்கள் எடுத்தது RCB. அதில் 28 ஓட்டங்களை வில் ஜேக்ஸ் எடுத்தார். 6,6,4,6,6 என ஓட்டங்கள் எடுத்து அவர் சதம் கண்டார். அதே நேரத்தில் அணியையும் வெற்றி பெற செய்தார்.