நாட்டிலுள்ள 27 இலட்சம் தொழிலாளர்களின் நன்மை கருதி இதுவரை 09 வீதமாகவிருந்த ஊழியர் சேமலாப நிதிக்கான வட்டி வீதத்தை, 13 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஊழியர் சேமலாப நிதியின் வட்டி வீதத்தை 09 வீதமாக பெற்றுக்கொடுப்பதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையிலும், தொழிலாளர்களின் நலன் கருதி 9 வீத வட்டியை 13 வீதமாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யாக்கப்பட்டுள்ளதுடன், அது உண்மைக்குப் புறம்பானது என்றும் இராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், நாட்டிலுள்ள பாரிய நிதியமாக ஊழியர்சேமலாப நிதியம் காணப்படுகிறது. இதுவரை அந்நிதியத்தில் 27 இலட்சம் பேர் அங்கத்தவர்களாக உள்ளனர். அரசாங்கம் முன்னெடுக்கும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஊழியர் சேமலாப நிதி தொடர்புடைய கடன் சம்பந்தமாகவே பாரிய சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.
பாராளுமன்றத்திலும் ஊடகங்கள் மூலமாகவும் பலர் அதுதொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளும் போது ஊழியர் சேமலாப நிதிக்கு பாரிய நட்டம் ஏற்படுமென அவர்கள் தெரிவித்து வந்தனர். இன்று இவ்வாறு குற்றங்களை சுமத்திய பெரும்பாலானவர்கள் தற்பொழுது மௌனித்துள்ளனர்.
அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான ஊழியர்சேமலாப நிதியின் வட்டி வீதம் 13 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட அங்கத்தவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகுமென்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்