சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமுலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் விமான நிலையத்தில் நேற்று (16) காலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 37 வயது நபரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் நேற்றுக் காலை 08.15 மணியளவில் டுபாய் செல்வதற்காக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்துக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இவர் பயண அனுமதிக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஆவணங்களை சமர்ப்பித்தது தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள், இவரை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமுலாக்கப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். பரிசோதனையில் போலியான தகவல்களுடன் போலி விசா தயாரிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
விசாரணையில் தரகர் ஒருவரிடம் 30 இலட்சம் ரூபா கொடுத்து விசா ஏற்பாடு செய்ததாகவும் கனடா சென்ற பின்னர் மேலும் 30 இலட்சம் ரூபா தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.