அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்வதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை பகுதி, ஒலுவில் பகுதி, நிந்தவூர், மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, கிட்டங்கி, நாவிதன்வெளி உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த ஆறுகளை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான சுமார் 9, 5, 4 அடி நீளமுடைய முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இம்மாவட்டத்திலுள்ள களப்புகள் போன்ற இடங்களிலும் முதலை அச்சுறுத்தல் தொடர்ந்து வருகின்றன.
மேற்படி பகுதிகளிலுள்ள வாவிகள், குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
மேலும் தற்போது சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள், கால்வாய்களை அண்டிய பகுதியில் நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் முதலைகளின் இரைக்குள்ளவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.