நாட்டின் மது உற்பத்தி 2023ஆம் ஆண்டில் 19 வீதமாக குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்விக்கு பதிலளிக்கையிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதிகமாக விற்பனையாகும் 180 மில்லி லீற்றர் கொண்ட மதுபான போத்தல்களின் உற்பத்தி சுமார் 15 மில்லியனால் குறைந்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்-
2022 ஆம் ஆண்டில் 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல்கள் 57.7 மில்லியன் உற்பத்தி செய்யப்பட்டது. 2023 இல் அது 39.5 மில்லியனாக குறைந்துள்ளது. 2022 இல் தயாரிக்கப்பட்ட 180 மில்லி லீற்றர் பாட்டில்களின் அளவு 105.8 மில்லியனாக இருந்தது. ஆனால் 2023 இல் அது 90.5 மில்லியனாகக் குறைந்துள்ளது. இதேவேளை, 2023ஆம் ஆண்டில் மாத்திரம் 214 புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் 147 F.L 7, 8 மற்றும் F.L 11 வகைகள் சுற்றுலாத்துறைக்காக வழங்கப்பட்டன. கலால் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட மொத்த மதுபான அனுமதிப்பத்திரங்களின் எண்ணிக்கை 5,730. சட்டரீதியான மதுபான கூடங்கள் ஸ்தாபிக்கப்படுவதால் மதுப்பாவனை அதிகரித்து வருவதாக கருத்து வெளியிடப்படுகிறது.இருந்த போதிலும், சட்ட ரீதியாக மதுவிலக்கு இல்லாத பிரதேசங்களில் சட்டவிரோத மதுபானம் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, அவற்றைத் தடுத்து, இழந்த வரி வருமானத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் . எந்த சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் மது பாவனையை ஊக்குவிக்காது. மதுபான அனுமதிப்பத்திர கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மதுபான போத்தல் ஒன்றின் விலையில் 75 வீதமாக வரி அறவிடப்படுவதாகவும், மதுபானத்துக்கு அதிக வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்