ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான காலப்பகுதி தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் திணைக்களம் இது குறித்து நேற்று (09) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் நடத்துவதற்கு ஏற்ப வேட்பு மனுக்கள் ஏற்கப்படும் என, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இத்தொகையில் 18 வயதை பூர்த்திசெய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலுக்கு ஆயிரம் கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான வாக்காளர் பதிவேடுகள் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை, நேற்று தொடக்கம் ஆரம்பித்துள்ளதாக தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாகவும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி, வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்காளர் பதிவேட்டில் பெயர் சேர்க்கப்படாத நபர்கள், தங்களின் பெயர்களை உரிய பட்டியலில் சேர்க்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.