யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றிலிருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் அவரது 16 வயது மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி ‘அம்மாவின் கழுத்தை நானே நெரித்து கொலை செய்தேன் எனவும் சிறுவன் பொலிஸ் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை வீடொன்றிலிருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.
தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்ததுடன் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டில் தாயும் மகனும் மட்டுமே இருந்துள்ளனர்.
மறுநாள் பெண் உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். பெண்ணின் மகனான 16 வயதுடைய சிறுவன் வீட்டில் இருந்து காணாமல் போயிருந்ததுடன், வீட்டின் சுவர்களில் இரத்த கறைகளும் காணப்பட்டன.
இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் காணாமல் போன 16 வயது சிறுவன் நேற்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ‘தானே தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை , சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் கைபேசி விளையாட்டுக்களுக்கு (மொபைல் கேம்ஸ்) அடிமையானவர் எனவும், அதனால் சிறுவன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்ததாகவும் தெரியவருகின்றது.