கடந்த ஏப்ரல் மாதம் அம்பாறை மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 66 வர்த்தகர்களுக்கு நீதிமன்றங்களால் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி எஸ்.என்.எம்.சாலிய பண்டார தெரிவித்தார்.
சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், அம்பாறை, தெஹியத்தகண்டி ஆகிய நீதிமன்றங்களின் நியாயாதிக்கத்துக்குட்பட்ட பிரதேசங்களில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளில் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 103 வர்த்தகர்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், இவர்களில் 66 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதன்போதே மேற்படி வர்த்தர்களுக்கு அபராதத்தொகை நீதிமன்றங்களால் விதிக்கப்பட்டதாகவும், அவர் கூறினார்.
இவ்வாறிருக்க ஏனைய வர்த்தகர்களுக்கு எதிராகவும் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, நுகர்வோர் நலன் கருதி வர்த்தக நிலையங்களில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை, நுகர்வுக்கு பொருத்தமில்லாத பொருட்களை காட்சிப்படுத்தியமை, காலாவதியான பொருட்கள் மற்றும் தரமற்ற பொருட்களை விற்பனை செய்து நுகர்வோரை ஏமாற்றுதல், மின் உபகரணங்களுக்கான கட்டுறுதிக் காலத்தை வழங்காமை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் செய்த முறைப்பாட்டை அடுத்து பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்கள் இச்சுற்றிவளைப்புகளை மேற்கொண்டதாகவும், அவர் கூறினார்.
ஒலுவில் விசேட நிருபர்