வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் கோயிலின் வருடாந்த வைகாசி திங்கள் திருக்குளிர்த்திச் சடங்கு விழா எதிர்வரும் 13ஆம் திகதி (திங்கட்கிழமை ) மாலை கடல் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு திருக்கல்யாணக்கால் நடும் வைபவத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
இந்த விழா தொடர்ந்து 8 தினங்கள் நடைபெறுவதுடன், எதிர்வரும் 21ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையவுள்ளதாக, அக்கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இரண்டாம் நாளான 14ஆம் திகதி மாலை சடங்கு பூஜையும் ஊர்சுற்றுக் காவிய பாடலும் நடைபெறும். 15ஆம் திகதி முதல் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமைவரை தொடர்ந்து பிற்பகல் ஒரு மணிக்கு பூஜையும் இரவு 7.00 மணிக்கு சடங்கு பூஜையும் ஊர்சுற்றுக் காவிய பாடலும் நடைபெறும்.
20ஆம் திகதி காலை மடிப்பிச்சை எடுக்கும் நிகழ்வும் பிற்பகல் 3.00 மணிக்கு பொங்கலுக்கு நெல் குத்தும் வைபவமும் நடைபெறும். 21ஆம் திகதி அதிகாலை திருக்குளிர்த்தி பாடப் பெறும். 27ஆம் திகதி இரவு 7.00 மணிக்கு 8ஆம் சடங்கு நடைபெறுமெனவும், கோயில் நிர்வாகத்தினர் கூறினர்.
இந்த விழா தொடர்பான ஆலோசனை குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றதுடன், இந்த வருட திருக்குளிர்த்தி விஞ்ஞாபனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்த விழாவை சிறப்பாக நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் தர்மகத்தாவும் பிரதம பொறியியலாளருமான பரமலிங்கம் இராஜமோகன் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
காரைதீவு குறூப் நிருபர்