அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கான 32 பேர் கொண்ட பூர்வாங்க இலங்கை குழாத்தில் இளம் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ இடம்பெற்றுள்ளனர்.
உபுல் தரங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இந்த பூர்வாங்க குழாம் தனது ஆரம்ப பயிற்சிகளை வரைவில் ஆரம்பிக்கவுள்ளது. இதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வியாஸ்காந்த் இலங்கை தேசிய குழாத்திற்கு அழைக்கப்பட்டிருப்பது இது முதல்முறையாகும்.
வியாஸ்காந்த், உபாதைக்கு உள்ளாகி இருக்கும் இலங்கை ரி20 அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவுக்கு பதிலாக தற்போது நடைபெற்று வரும் இந்திய பிரீமியர் லீக் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இலங்கை அணியில் இடம்பெறாத நிலையிலேயே இடது கை துடுப்பாட்ட வீரரான பானுக்க ராஜபக்ஷ 32 பேர் குழாத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். எதிர்வரும் உள்ளூர் ரி20 தொடரில் இந்த 32 வீரர்களையும் விளையாடச் செய்து ரி20 உலகக் கிண்ணத்திற்கான இறுதிக் குழாத்தை தேர்வு செய்வதற்கு தேர்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதில் தற்போது இந்திய பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்றிருக்கும் மதீஷ பதிரண, மஹீஷ் தீக்ஷன, நுவன் துஷார, துஷ்மன்த சமீர மற்றும் விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகிய வீரர்கள் இலங்கை திரும்பி ரி20 தொடர் மற்றும் தேசிய பயிற்சிகளில் பற்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரி20 உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் ஜூன் 1 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இலங்கை பூர்வாங்க குழாம்: வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), குசல் மெண்டிஸ், பத்தும் நிசங்க, சதீர சமரவிக்ரம, அஞ்சலோ மத்தியூஸ், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷானக்க, சாமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, அவிஷ்க பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், லசித் குரூஸ்புல்லே, சஹன் ஆரச்சிகே, நிரோஷன் திக்வெல்ல, குசல் ஜனித் பெரேரா, பானுக்க ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, துனித் வெள்ளாலகே, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷங்க, அசித்த பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான், மஹீஷ் தீக்ஷன, மதீஷ பதிரண, லஹிரு குமார, லஹிரு மதுஷங்க, பினுர பெர்னாண்டோ, நுவன் துஷார, ஜெப்ரி வன்டர்சே, விஜயகாந்த் வியாஸ்காந்த்.