லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் கல்கந்தை தோட்ட பிரிவில் அமைந்துள்ள சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் திடீரென தீ பரவியதில் அச்சிறுவர் அபிவிருத்தி நிலையம் பகுதியளவில் தீக்கிரையாகியுள்ளது.
மேற்படி நிலையத்தில் அதிகாலை வேளையில் தீப்பிடித்து எரிவதைக் கண்ட கல்கந்தை தோட்ட மக்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன், இச்சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸாருக்கும் தகவல் வழங்கினர்.
இந்த தீ விபத்தால் சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்த பெருமளவான பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த தீப்பிடிப்புச் சம்பவத்தால் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் கூரைப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், ஆரம்பக் கல்வி கற்கும் சிறுவர்களின் புத்தகங்கள், உபகரணங்கள் ஆகியனவும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்த தீப்பிடிப்புச் சம்பவமானது மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டதா அல்லது யாரேனும் தீ வைத்துள்ளனரா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் காணப்படும் இச்சிறுவர் அபிவிருத்தி நிலையத்தில் தீப்பிடிப்பு ஏற்பட்ட வேளையில் பாரிய வெளிச்சத்தைக் கண்டதுடன், புகை நாற்றமும் வருவதை தாம் உணர்ந்ததாகவும் தாம் வீடுகளை விட்டு வெளியில் பதறிக்கொண்டு வந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
தலவாக்கலை குறூப் நிருபர்