வலிகாமம் வடக்கு வசாவிளான் திக்கம்புரை ரெயிலர்கடைச் சந்தியிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு விசேட பேருந்து சேவையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைத்தார்.
அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வசாவிளானுக்கு சென்ற போது, அங்குள்ள மக்கள் தமது போக்குவரத்து பிரச்சினை தொடர்பாக அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்ததுடன், இப்பிரச்சினையை சீர்செய்யுமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைக் கவனத்திற்கொண்ட அமைச்சரின் பணிப்புரைக்கமைய, பேருந்து சேவையை ஆரம்பிக்க வட பிராந்திய போக்குவரத்துச் சபையினர் ஏற்பாடு செய்தனர். இதனைத் தொடர்ந்து இப்பேருந்து சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.
இப்பேருந்து சேவையானது வசாவிளான் சுதந்திரபுரம், வசாவிளான் மத்திய கல்லூரி, ஈழகேசரி பொன்னையா வீதி, குரும்பசிட்டி, கட்டுவன் சந்தி, தெல்லிப்பழை வைத்தியசாலை, கே.கே.எஸ். வீதி வழியாக யாழ் நகர்வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக, வட பிராந்திய போக்குவரத்துச் சபையினர் தெரிவித்தனர்.
யாழ். விசேட, கரவெட்டி தினகரன் நிருபர்கள்