தினகரன் இப்தார் நிகழ்வு நேற்று லேக் ஹவுஸில் நடைபெற்றது. லேக் ஹவுஸில் சேவையாற்றி ஓய்வுபெற்ற எம் ஏ எம் நிலாம், ஏ எச் எம் பாரூக் மற்றும் எம் வை எம் நவாஸ் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரியின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் பொது முகாமையாளர் சுமித் கொத்தலாவல, இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் புரவலர் ஹாசிம் உமர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
மாணவன் சிமாக் ஷிஹானின் கிராஅத்துடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் அஷ்ஷெய்க் பஹாத் பாயிஸ் நழீமி ரமழான் சிந்தனை மற்றும் துஆ பிரார்த்தனை வழங்கினார். இப்தார் நிகழ்வின் ஓர் அங்கமாக லேக் ஹவுஸ் நிறுவனத்தில் மிக நீண்ட காலமாக சேவையாற்றி ஓய்வு பெற்ற தினகரன் தமிழ் பிரசுரங்களுக்கான முன்னாள் ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் எம். ஏ. எம். நிலாம், மத்திய செய்திப் பிரிவில் மொழிபெயர்ப்பாளராக சேவையாற்றிய கலாபூஷணம் ஏ.
எச். எம் பாரூக் மற்றும் நலன்புரி மற்றும் நிதி முகாமைத்துவ பிரிவில் மிக நீண்ட காலமாக சேவையாற்றிய எம். வை. எம். நவாஸ் ஆகியோர் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் தினமின பிரதம ஆசிரியர் மனோஜ் அபேயதீர, டெய்லி நியூஸ் பிரதம ஆசிரியர் கேசர அபேவர்தன, சன்டே ஒப்சவர் பிரதம ஆசிரியர் பிரமோத் டி சில்வா, சிலுமின பதில் ஆசிரியர் திருமதி சிரோமி அபேசிங்க, தினகரன் இணை ஆசிரியர் மர்லின் மரிக்கார், லேக் ஹவுஸ் முஸ்லிம் மஜ்லிஸ் தலைவர் ஷம்ஸ் பாஹிம் உட்பட முஸ்லிம் மஜ்லிஸ் உறுப்பினர்கள், தினகரன் ஆசிரியபீட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். தினகரன் ஆசிரியபீட ஊடகவியலாளர் ஸாதிக் ஷிஹான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். படங்கள்: சுலோச்சன கமகே