பதுளை மாவட்டம், – லுணுகலை பிரதேச சுவிண்டன் தோட்டத்தில் சிலம்பரம்_- வள்ளியம்மை தம்பதிகளின் மகனான எஸ்.முருகையா தனது ஆரம்பக் கல்வியையை சுவிண்டன் தமிழ் வித்தியாலயத்திலும் பின்னர் இடைநிலை, உயர்தர கல்வியை லுணுகலை இராமகிருஷ்ண இந்து கல்லூரியிலும் கற்றார்.
1990ஆம் ஆண்டு அவருக்கு ஹொப்டன் பது/ கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரிய நியமனம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அடாவத்தை, பது/திருமகள் தமிழ் வித்தியாலயம், பது/அல்அமீன் முஸ்லிம் வித்தியாலயம், பது/ ஹொப்டன் விக்னேஸ்வரா தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றில் ஆசிரியராக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியுள்ளார்.
சக ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள், சமூகநலன் விரும்பிகள் ஆகியோரிடம் நட்புறவுடன் பழகிவந்தார். இவரிடம் கற்ற மாணவர்கள் பலர் தற்போது உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.
எஸ். முருகையா 2007 ஆம் ஆண்டு பது/ சுவிண்டன் தமிழ் வித்தியாலயத்திற்கு அதிபராக நியமிக்கப்பட்டார். இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு அவர் அரும்பணியாற்றியுள்ளார். பசறை கல்வி வலயத்தில் சிறந்ததோர் ஆரம்பப் பிரிவு பாடசாலையொன்று உருவாகுவதற்கு வழியமைத்துள்ளார்.
இப்பாடசாலையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று வருகின்றனர். இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறந்து விளங்குகின்றனர். அத்தோடு அவர் சுவிண்டன் தோட்ட ஆலய அறங்காவலர் சபையின் தலைவராகவும் பணியாற்றி வருகின்றார்.
அதிபர் எஸ். முருகையா கடந்த 25.04.2024 அன்று தனது கல்வி சேவையிலிருந்து ஓய்வுபெற்றுள்ளார். புதிதாக இலங்கை அதிபர் சேவை போட்டிப்பரீட்சையில் நியமனம் பெற்றுவந்த அதிபர் திருமதி சண்முகப்பிரியாவை இன்முகத்தோடு வரவேற்று தனது நிர்வாகப் பொறுப்பை ஒப்படைத்தார்.
இவரது பணி ஓய்வினையொட்டி பாடசாலை சமூகத்தினரும் லுணுகலை பிரதேச சமூகநல அமைப்புகளும் பிரியாவிடை விழாக்களை நடத்தி வருகின்றன.
ந.மலர்வேந்தன்
(லுணுகல நிருபர்)