வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்கத் தயார் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் (May-Elin Stener) தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் (May-Elin Stener) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை நேற்றுமுன்தினம் சந்தித்து கலந்துரையாடினார். இக்கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கலந்துரையாடலில் ,
வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள், தங்குமிட வசதிகள் போதுமான அளவு இல்லை என ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கற்றல் செயற்பாடுகள் மற்றும் தொழிற்கல்வியை பெற முடியாது போகும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.
விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்கத் தயார் எனவும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
(யாழ்.விசேட நிருபர்)