கண்பார்வையோடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் சவூதி நூர் தன்னார்வத் திட்டத்தை மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையம் காத்தான்குடியில் ஏற்பாடு செய்து நடத்தி வருவதாக இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தெரிவித்துள்ளார்.
கடந்த 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டம் நாளை 10 ஆம் திகதிவரை நடைபெறவிருப்பதோடு இன, மதபேதங்களுக்கு அப்பால் அனைத்து மக்களும் இங்கு மனிதாபிமான சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் துன்பத்தைத் துடைக்கவுமென, இரு புனிதத்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் ஸுஊத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சாலமன் ஆல் ஸுஊத் ஆகியோர் தலைமையில் சவூதி அரேபிய அரசு பல்வேறு வகையான மனிதாபிமான சேவைகளை மேற்கொண்டு வருகின்றது.
இத்திட்டத்தில் கண்கள் தொடர்பான நோய்களுக்கு உள்ளாகியுள்ள ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்தல், அவர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குதல், மருந்து மற்றும் மூக்குக் கண்ணாடி வழங்குதல், சுகாதார விழிப்புணர்வு வழங்குதல் ஆகிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டமானது, கடந்த காலங்களில் இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் மன்னர் சல்மான் நிவாரணம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான மையத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களின் தொடராகும். கடந்த ஆண்டு செப்டம்பர் 06ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், தென்னிலங்கையில் வலஸ்முல்ல மற்றும் கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடி ஆகிய பகுதிகளில் இவ்வாறான தன்னார்வத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டன.
உலகெங்கிலும் தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட சவூதி அரேபிய இராச்சியத்தின் அணுகுமுறையைத் தொடர்வது, மனிதாபிமானமற்ற நோக்கங்கள் எதுவுமின்றி உதவிகளை வழங்குதல் ஆகியன இத்திட்டத்தில் உள்ளன.
நம்பகமான சர்வதேச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுதல் மற்றும் அவற்றின் ஆலோசனைகளைப் பெறல், நிவாரண திட்டங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து சர்வதேச தரங்களையும் பயன்படுத்துதல், இராச்சியத்தில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள எல்லாத் தரப்பினருத்தும் முயற்சிகளை ஒன்றிணைத்தல், உதவிகளில் உயர் தரம் மற்றும் நம்பகத்தன்மை பேணப்படல் ஆகியன இத்திட்டங்களில் உள்ளடங்கியுள்ள அம்சங்களாகும்.
2023, டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், மையத்தினால் செயற்படுத்தப்பட்ட திட்டங்களின் பொதுவான புள்ளிவிபரங்களின்படி, உலகின் 98 நாடுகளில் மொத்தமாக 6,532,536,783 அமெரிக்க ெடாலர் செலவில் 2,673 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் இலங்கையில் 17 திட்டங்கள் 14,311,611 அமெரிக்க டொலர்கள் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் மேலும் தெரிவித்தார்.