வியப்பளிக்கும் பிரமாண்டமான கட்டட நிர்மாணம்!
அபுதாபி பாப்ஸ் அமைப்பு சார்பில் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் 27 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான இந்துக் ேகாயில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த பிரமாண்டமான இந்துக் கோயிலை கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி அமீரகத்துக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
அபுதாபியில் புதிதாகத் திறக்கப்பட்ட இந்துக் கோயிலை அமீரகத்தில் வசித்து வரும் பொதுமக்கள் கடந்த 1 ஆம் திகதி முதல் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் வழிபாடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அபுதாபி, துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் அதிகமாக வருகை தருகின்றனர். இதனால் கோயில் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. கார் நிறுத்தும் இடங்களில் அதிகமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்க கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. கோயிலுக்கு பக்தர்கள் உற்சாகத்துடன் வருகை தருகின்றனர்.
இந்தக் கோவிலை பார்வையிட வருகை தருகின்ற பொதுமக்கள் பலரும் “அமீரகத்தில் இத்தகையதொரு பிரமாண்டமான கோயிலைப் பார்ப்பது மிகவும் அற்புதமாக இருக்கிறது” எனக் கூறினர்.