சித்திரை திருவிழா கடந்த 12ஆம் திகதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவிந்தா, கோவிந்தா, கோஷத்துடன் பக்தர்களின் ஆரவாரத்துடன் வைகை ஆற்றில் இன்று (23) அதிகாலை பச்சை பட்டு உடுத்தி இறங்கினார் கள்ளழகர். வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக மலையில் இருந்து புறப்பட்டு வந்த அழகரை மூன்று மாவடியில் மதுரை மக்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சியில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 12ஆம் திகதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த 8ஆம் திகதி முகூர்த்தக்கால் ஊன்றி திருவிழா ஆரம்பமானது. மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 19ஆம் திகதி பட்டாபிஷேகமும், 20ஆம் திகதி திக்கு விஜயமும் நடந்தன. மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், நேற்று காலை தேரோட்டமும் கோலாகலமாக நடைபெற்றன.
சித்திரை திருவிழாவுக்காக அழகர்மலையில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் வேடம் பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் கைத்தடி, நேரிக்கம்பு ஏந்தி தங்கப்பல்லக்கில் திங்கட்கிழமை மாலை மதுரையை நோக்கி புறப்பட்டார். பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, கடச்சனேந்தல் பகுதிகளில் உள்ள மண்டபங்களில் எழுந்தருளி திங்கட்கிழமை காலை 6.00 மணி அளவில் மதுரையை அடுத்த மூன்றுமாவடிக்கு வந்தார்.
அங்கு கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடந்தது. அழகர்வேடம் அணிந்த பக்தர்கள், தோல் பைகளில் இருந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, கள்ளழகரை வர்ணித்து பாடல்கள் பாடி அதிர்வேட்டுகள் முழங்க எதிர்கொண்டு வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புதூர், டி.ஆர்.ஓ. காலனி, ரிசர்வ்லைன், ரேஸ்கோர்ஸ், அவுட்போஸ்ட் வழியாக வழிநெடுகிலும் அமைக்கப்பட்டு இருந்த மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார். கள்ளழகர் வருகையால் மதுரை மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கிறது.
நேற்று (22) இரவு 10.00 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தார். நள்ளிரவில் திருமஞ்சனமாகி தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்து கொண்டு வரப்பட்ட மாலை, கள்ளழகருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பின்னர் இன்று (23) அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்தவாறே ஆயிரம் பொன் சப்பரத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். அதன்பின் 3.00 மணிக்கு வைகை ஆற்றை நோக்கி புறப்பட்டார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். முன்னதாக வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்க எழுந்தருளி இருந்தார். இதனைத்தொடர்ந்து கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அந்த உன்னத காட்சியை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மதுரை மாநகரில் குவிந்துள்ளார்கள். வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினர். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தீப்பந்தம் ஏந்தியும், தோலினால் செய்த பைகளில் தண்ணீரை நிரப்பி பீய்ச்சி அடித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சிக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொலிஸார்பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை வைகை ஆற்றின் ஆழ்வார்புரம் அருகே இந்து சமய அறநிலைத்துறை மற்றும் லாலா சத்திரம் சார்பில் மண்டகப்படி அமைக்கப்பட்டு, நான்கு புறமும் பக்தர்கள் பாதுகாப்புக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியை சுற்றிலும் கண்காணிப்பு கெமராக்கள், உயர்மட்ட கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பொலிஸாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்தார்கள்.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது