25 மில்.அமெரிக்க டொலர் நிதி ஒதுக்கீடு
காலநிலைக்கு ஏற்ப நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தை (CSIAP – Climate Smart Irrigated Agriculture Project) மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்காக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விவசாயம் மற்றும் பெருந்தோட்டத் தொழில் அமைச்சின் கீழ் வெளிநாட்டு நிதியில் இந்தத்திட்டப் பணி இந்த ஆண்டு நிறைவடைய இருந்த போதும் இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
காலநிலையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதை இலக்காக்கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் அம்பாறை, வவுனியா, அனுராதபுரம், அம்பாந்தோட்டை, மொனராகலை, குருணாகல், போன்ற மாவட்டங்களில் சிறிய ஏரிகள் மற்றும் கால்வாய்கள் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் அந்த பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான தொழில்நுட்பம் மற்றும் அறிவும் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதுடன் உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.
இத் திட்டம் இவ்வருடத்தில் நிறைவடையவிருந்த போதிலும்,இதனை தொடர்ந்து இந்தவருடமும் நீடிப்பதற்காக விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவைக்கு ஆலோசனையை முன்வைத்தார். இத்திட்டத்தின் பணிகளை மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்க 25 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஜுல்பள்ளம் மற்றும் கவுந்திஸ்ஸபுர விவசாய தொழில் முனைவோர் கிராமங்களில் இளம் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்க்கப்பட்டன. இதுதொடர்பான நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.