இளம் கால்பந்து வீரர்களின் திறமையை வெளிக்கொண்டுவரும் நோக்கில் சிட்டி கால்பந்து லீக் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்த 19 வயதுக்கு உட்பட்ட யூசுப் கிண்ண கால்பந்து தொடரில் சோண்டர்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நேற்று முன்தினம் (10) நடைபெற்ற கொழும்பு கால்பந்து கழகம் மற்றும் சோண்டர்ஸ் இடையிலான இறுதிப் போட்டியில் சோண்டர்ஸ் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.
கிண்ணத்தை வென்ற சோண்டர்ஸ் அணிக்கு ஒன்றரை இலட்சம் ரூபா மற்றும் இரண்டாம் இடம் பெற்ற கொழும்பு கால்பந்து கழகத்திற்கு ஒரு இலட்சம் ரூபா மற்றும் வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டன.
தொடரின் சிறந்த கோல் காப்பாளராக சோண்டர்ஸ் அணியின் பீ. கிஷோர் விருது வென்றதோடு, சிறந்த வீரராக கொழும்பு அணியின் உமர் சக்கீல் தெரிவானார். கொழும்பு–சோண்டர்ஸ் இடையிலான போட்டியில் 24 ஆவது நிமிடத்தில் மொஹமட் முபாசல் அபார கோல் ஒன்றை பெற்றதோடு, தொடர்ந்து இரு அணிகளாலும் கோல் புகுத்த முடியாமல்போனது. கொழும்பு கால்பந்து கழகத்திற்கு கோல் பெறும் 5 வாய்ப்புகள் தவறிப்போனதோடு, போட்டி முழுவதும் அதிஷ்டம் சோண்டர்ஸ் பக்கம் சுற்றியது.
அரையிறுதிப் போட்டிகளில் சம்பியன் கிண்ணம் வென்றிருந்த ஜாவாலேன் அணி சோண்டர்ஸிடம் 4–0 என்ற கோல்களாலும், விக்டரி அணி கொழும்பு கழகத்திடம் 6–1 என்ற கோல்களாலும் தோல்வியை சந்தித்தன.
பிரின்ஸ் குணசேகர