வரட்சியான காலநிலையை தொடர்ந்து மவுஸாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட பாலம், சண்முகநாதர் ஆலயம், இஸ்லாமிய பள்ளிவாசலிருந்த தூபி, பௌத்த விகாரை, அதன் முற்றத்திலிருந்த போதிமரம், கங்கேவத்தை நகரிலிருந்த சித்தி விநாயகர் ஆலயம் என்பன வெளித் தென்பட்டுள்ளன.
நீரில் மறைந்திருந்த இவை தற்போது வெளித் தென்பட்டுள்ளதால், அதிகளவான மக்கள் சென்று அவற்றை பார்வையிட்டு வருகின்றனர்.
மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பமான காலநிலை நிலவுகிறது.
மத்திய மலைநாட்டிலுள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வரட்சியால் வெகுவாக குறைந்துள்ளது. சிற்றாறுகள், ஓடைகள், அருவிகள், ஆறுகளுக்கு நீர்வரத்து குறைவாக உள்ளது.
நீர் வீழ்ச்சிகளும் வரண்டுள்ளது. இதன் காரணமாக நீர் மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாமென, நீர்மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறிப்பாக, மவுஸாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட, சுமார் 52 அடிவரை குறைந்துள்ளது.
அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் அதன் கொள்ளளவை விட 47 அடி குறைந்துள்ளதாக, அவற்றின் பொறியியலாளர்கள் கூறினர்.
இதேவேளை மலைநாட்டில் தொடரும் வரட்சியான காலநிலை காரணமாக சுத்தமான குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்