உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு(10 ஆவது ஆண்டு) கடந்த 6 ஆம் திகதி தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆறுமுகம் தலைமையில் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் தலைவர் செல்வகுமார் வரவேற்புரை நிகழ்த்த, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, வெளிநாடுவாழ் தமிழர் நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், மலேசியாவைச் சேர்ந்த பினாங்கு மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு, நாடாளுமன்ற உறுப்பினர் யுனேசுவரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன் குமரன், குமரேசன், வி.ஐ.டி துணைத் தலைவர் செல்வம் ஆகியோரும்ம் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.
இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட தமிழ் பாரம்பரிய மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், பேராளர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மிக்ஜாம் புயலின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மலேசியாவில் இருந்து உதவி செய்த டத்தோ ஸ்ரீ ஹரிஹரன், KPY பாலா ஆகியோருக்கு சாதனையாளர் விருதும், இலங்கையைச் சேர்ந்த பிரகாஷ் அவர்களுக்கு தமிழ் நிறுவன விருதும் வழங்கப்பட்டன.
சிறந்த ஊடக சேவைக்கான விருது மலேசியா நவநீதனுக்கு வழங்கி வைக்கப்பட்டது. உணவு இடைவெளிக்குப் பின்னர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட சொற்போர் எனும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. வெற்றியாளர்களுக்கு துணைவேந்தர் ஆறுமுகம், பதிவாளர் செந்தில்குமார் ஆகியோர் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர். இந்நிகழ்வை உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.