இருபதாவது தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட பிரதான நிகழ்வு, அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (26) நடைபெறவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.றியாஸ் தெரிவித்தார்.
இதன்போது, அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்தில் பல்வேறு சமய நிகழ்வுகளும் நினைவுதின நிகழ்வுகளும் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, காரைதீவு, கல்முனை, சாய்ந்தமருது, பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய பிரதேசங்களிலுள்ள கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், விகாரைகள் ஆகியவற்றில் விசேட சமய வழிபாடுகள் மற்றும் துஆ பிரார்த்தனை நடைபெறவுள்ளது.
இதேவேளை பாண்டிருப்பு, காரைதீவு, கல்முனை, திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் கடல்கோள் அனர்த்தத்தில் இறந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிகளில் கடல்கோள் அனர்த்தத்தில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
பொத்துவில், திருக்கோவில், கோமாரி, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, மருதனை ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களில் அனர்த்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
அனர்த்த முன்னெச்சரிக்கை கோபுரங்களை ஒரே நேரத்தில் இயங்கச் செய்து, அதன் மூலம் அனர்த்த முன்னெச்சரிக்கை ஒத்திகையை நடத்தி, பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டத்தை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு முன்னெடுத்துள்ளது. கரையோரப் பிரதேசங்களிலுள்ள மத ஸ்தலங்கள், பாடசாலைகளில் அனர்த்த முகாமைத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
ஒலுவில் விசேட நிருபர்