வட கொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்க இராணுவ வீரர் டிரேவிஸ் கிங் தற்போது அமெரிக்க தடுப்புக்காவலில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
23 வயது கிங், ஜூலை மாதம் தென் கொரியாவிலிருந்து சட்டவிரோதமாக வட கொரியாவுக்குச் சென்றார்.
அமெரிக்க இராணுவத்தின் மனிதத்தன்மையற்ற நடவடிக்கை, இனவாதம் ஆகியவற்றால் கிங் தப்பி வந்ததாக வட கொரிய ஊடகம் கூறியிருந்தது.
அவருடைய உடல்நிலை, வட கொரியாவில் அவர் சிறைவைக்கப்பட்டிருந்த விபரம் ஆகியவை குறித்து எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. கிங்கை வெளியேற்ற பியோங்யாங் முடிவு செய்திருப்பதாக வட கொரிய அரசாங்கச் செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் (27) கூறியிருந்தது. கூடுதல் விபரங்களை அது வெளியிடவில்லை. 2021ஆம் ஆண்டிலிருந்து கிங் அமெரிக்க இராணுவத்தில் உள்ளார்.
சுழற்சி முறையில் அவர் தென் கொரியா அனுப்பப்பட்டிருந்தார். தாக்குதல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர் அங்கு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஜூலை 10ஆம் திகதி விடுவிக்கப்பட்ட பின்னர் அவர் வட கொரியாவுக்குச் சென்றார்.