அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஒசிரிஸ் ரெக்ஸ்் விண்கலம் ஒரு துப்பாக்கி குண்டின் வேகத்தை விட 15 மடங்கு வேகத்தில் நாளை (24) பூமியின் வளிமண்டலத்தை அடையவுள்ளது.
இந்த விண்கலம் வானில் தீப்பந்தாக மாறவிருந்தபோதும் அதன் தீக்காப்பு அமைப்பால் பாதுகாப்பு பெற்று பாராசூட்களால் வேகத்தை குறைத்து அமெரிக்காவின் உத்தாஹ்வின் மேற்கு பாலைவனத்தில் இறங்கவுள்ளது.
இந்த விண்கலத்தில் பென்னு குறுங்கோளில் இருந்து பெறப்பட்ட தூசி, கற்களின் மாதிரிகள் உள்ளடங்குகின்றன. இது பூமியில் உயிரினங்களின் தோற்றத்திற்கான கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியாக அமையவுள்ளது.
“பென்னு குறுக்கோளின் 250 கிராம் மாதிரி எமக்கு கிடைத்ததும் எமது கிரகத்தில் முன்னர் இருந்தது மற்றும் சில நேரம் எமது சூரிய குடுப்பத்திற்கு முன்னர் இருந்த கூறுகள் பற்றி நாம் ஆராயவுள்ளோம்” என்று இந்தத் திட்டத்தின் முதன்மை ஆய்வாளரான பேராசிரியர் டன்டா லொரட்டே தெரிவித்துள்ளார்.
இந்த பென்னு போன்ற குறுங்கோள்கள் மிகவும் பழமையானவை என்பதால் இவற்றை ஆய்வு செய்வதால், பூமிக்கு தண்ணீர் மற்றும் வாழ்க்கையின் கட்டுமான தொகுதிகள் பற்றி அறிந்துக்கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
2016இல் அனுப்பப்பட்ட ஒசிரிஸ் ரெக்ஸ்் விண்கலம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் 2 கோடி கி.மீ தூரம் பயணித்து 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி பென்னு குறுங்கோளை நெருங்கியது.
அதன்பின் தொலைவில் இருந்தபடியே தொடர்ந்து பல மாதங்கள் பென்னுவை ஆய்வு செய்து வந்த ஓசிரிஸ் ரெக்ஸ், குறுங்கோளில் துகள்களை எடுப்பதற்கான இட த்தை தேர்வு செய்தது.
பின், குறுங்கோளின் அருகில் மிக நெருக்கமாகச் சென்று ஒசிரிஸ் ரெக்ஸ் தனது இயந்திர கைகளால், குறுங்கோளில் உள்ள மாதிரிகளை பெற்று தன்னிடமிருந்த கேப்ஸ்யூலில் சேகரித்துக்கொண்டது.
பின்னர் தனது பணியை 2020ஆம் ஆண்டு நிறைவு செய்த ஓசிரிஸ் ரெக்ஸ் தான் சேகரித்த மாதிரியுடன் பூமிக்கு திரும்ப ஆரம்பித்தது.
இதில் சூரிய குடும்பத்தில் இருக்கும் மிக ஆபத்தாக சிறுகோளாக பென்னுவை நாசா வகைப்படுத்தியுள்ளது. அறியப்பட்ட குறுங்கோள்களில் பூமியை தாக்க அதிக வாய்ப்பு இருக்கும் குறுங்கோளாக இது உள்ளது.