ஈரானும் இஸ்ரேலும் உடனடியாக இராஜதந்திரப் பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
ஆளில்லா விமானங்களையும் ஏவுகணைகளையும் கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து உருவாகியுள்ள பதற்ற நிலையைத் தணிப்பதற்கு இராஜதந்திர பேச்சுவார்த்தை உடனடித் தேவை என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பகைமை அதிகரித்திருப்பதால் பிராந்தியத்தின் அமைதி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது குறித்து நாம் மிகவும் கவலையடைகின்றோம். அதனால் தற்போதைய பதற்றநிலையைத் தணிக்கவும் மோதல் நிலையைத் தவிர்க்கவும் இராஜதந்திர பாதைக்கு திரும்புமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.