உறவினர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்க வேண்டும் எனவும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
இது தொடர்பில் அல் குர்ஆன் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறது, ‘(நம்பிக்கையாளர்களே..!) நீங்கள் நீதி செலுத்தும்படியாகவும், நன்மை செய்யும்படியாகவும், உறவினர்களுக்கு (பொருள்) கொடுத்து உதவி செய்யும் படியாகவும் நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) ஏவுகிறான். (நஹ்ல்:90)
அதேநேரம் நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம், இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி)
இந்த அல் குர்ஆன் வசனமும் நபிமொழியும் சொந்தங்களை சேர்ந்து வாழ்வது எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்தியம்புகின்றன.
அத்தோடு ‘உறவை முறித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்- புஹாரி)
ஆகவே உறவுகளைப் பேணி வாழ்வதும் சொந்த பந்தங்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதும் மிகவும் முக்கியமானது. இருந்த போதிலும் அதன் முக்கியத்துவத்தை உணராத பலர், பல்வேறு காரணங்களின் நிமித்தம் சொந்த பந்த உறவுகளைத் துண்டித்துக் கொண்டவர்களாவும் முறித்துக் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
இது இஸ்லாமிய போதனைகளுக்கு முரணானது என்பதை உணர்ந்து செயற்படுவது இறைவிசுவாசகளின் பொறுப்பாகும். அதனால் இறையருள் நிறைந்த இந்த ரமழான் மாதத்திலாவது பகைமைகளையும் கசப்புணர்வுகளையும் மறந்து மன்னித்து உறவுகளையும் சொந்த பந்தங்களையும் சேர்ந்து நடப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
முப்தி எ.எச்.எம் மின்ஹாஜ்
(காஷிபி, மழாஹிரி) நிந்தவூர்