அல்லாஹ் அவனது அடியார்கள் மீது பொழிந்துள்ள கருணையின் காரணமாக ஒவ்வொரு ஃபர்ளான அமலுடனும் அதே போன்ற உபரியான இபாதத்தையும் மார்க்கமாக ஆக்கியுள்ளான். ஃபர்ளான தொழுகைக்கு முன் பின் சில சுன்னத்தான நஃபீலான தொழுகைகள் இருப்பதை நாம் அறிவோம். அதே போன்று தான் ஃபர்ளான ரமழான் நோன்பிற்கு முன்னும் பின்னும் சில சுன்னத்தான, நஃபீலான நோன்புகள் உள்ளது. இந்த உபரியான இபாதத்களைப்பொறுத்தவரை அது ஃபர்ளான இபாதத்தில் நம்மிடம் ஏற்பட்ட கோளாறுகளையும் குறைகளையும் ஈடுசெய்யக்கூடியதானவாக விளங்குகின்றன.
அதன் அடிப்பையில் தான் ஷவ்வால் மாத ஆறு நோன்பை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியும் அதன் சிறப்பை எடுத்துக்கூறியும் உள்ளார்கள்.
ரமழானைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்பது விரும்பதக்க சுன்னாவாகும். இது கடமையான நோன்பல்ல. என்றாலும் இதற்கென சிறப்பும் கூலியுமுள்ளது. இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ரமழான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்றவர், காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று கூறியுள்ளார்கள்.
(ஆதாரம்: ஸஹீஹ் முஸ்லிம்)
இந்நபி மொழிக்கு இமாம் நவவி (ரஹ்) அவர்கள் வழங்கியுள்ள விளக்கத்தில், ஈதுல் ஃபித்ரைத் தொடர்ந்து ஆறு நாட்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்பது சிறந்ததாகும். அதே போன்று அதை பிரித்து ஷவ்வாலின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை நோற்றாலும் ஷவ்வாலின் நோன்பை தொடர்ந்து நோன்பு நோற்றதின் சிறப்பை அடையலாம் என்பது நமது தோழர்கள் கருத்தாகும்.
(ஆதாரம்: ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்)
ரமழான் மாதம் நோன்பு நோற்று அதைத் தொடர்ந்து வரக்கூடிய ஷவ்வால் ஆறு நாள் நோன்பு நோற்பது ஒரு வருடம் நோன்பு நோற்பதற்கு ஈடாகும் என்பதை மேற்கூறிய நபிமொழித் தெரிவிக்கிறது. இதற்கான விளக்கத்தை நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள்.ரமழானுக்குப் பிறகு யார் ஆறு நாள் நோன்பு நோற்பார்களோ அது வருடம் முழுமைக்குமான நோன்பாகும். யார் ஒரு நன்மைக் கொண்டு வருவாரோ அவருக்கு அது போன்று பத்து மடங்கு நன்மைகள் வழங்கப்படும்.
(ஆதாரம்: சுனன் இப்னு மாஜா)
அதேநேரம், ஒரு (ரமழான்) மாத நோன்பு பத்து மாதத்திற்கு ஈடாகும். அதைத் தொடர்ந்து ஆறு நாள் நோன்பு இரண்டு மாதத்திற்கு ஈடாகும் அது தான் வருடம் முழுமைக்குமானதாகும்’ எனவும் நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: சுனன் தாரமி)
சில ஃபுகஹாக்கள் ரமழானுக்குப் பின் உள்ள ஷவ்வாலின் ஆறு நோன்பு ஒரு வருட ஃபர்ளான நோன்பிற்கு ஈடாகும் என்று கூறியுள்ளார்கள். என்றாலும் இரட்டிப்பான கூலி என்பது ஒரு நன்மைக்கு பத்து மடங்கு கூலி என்ற பொதுவான செய்தியின் மூலம் உறுதியாகியுள்ளது.
ஷவ்வால் நோன்பின் பலனைப் பொறுத்தவரை ரமழானின் ஃபர்ளான நோன்பில் ஏற்பட்டுள்ள குறைகளுக்கும் தவறுகளுக்கும் அது பரிகாரமாகிவிடும். ஏனெனில் மறுமையில் ஃபர்ளான நமது கடமைகளில் நாம் செய்த தவறுகளுக்கு உபரியான வணக்கங்களின் மூலம் தான் ஈடுசெய்யப்படும்.
ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக மறுமையில் அல்லாஹ் தனது அடியானிடம் அவர்களின் அமலில் முதலாவதாக தொழுகையைக் குறித்துத் தான் விசாரணை செய்வான். அது சரியாக இருந்தால் அவன் ஈடேற்றத்தையும் வெற்றியையும் அடைவான்.
அது கெட்டுவிட்டால் அவன் நஷ்டமடைந்து விடுவான். அவனது ஃபர்ளுகளில் ஏதாவது குறை ஏற்பட்டால் மேன்மையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் என்னுடைய அடியானுக்கு ஏதாவது உபரியான வணக்கங்கள் உள்ளதா? என்று பாருங்கள் அதன் மூலம் ஃபர்ளான வணக்கத்தில் ஏற்பட்ட குறையை நிவர்த்தி செய்யுங்கள் என்று கூறுவான். பின்னர் ஏனைய அமல்களும் அது போன்று தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: ஜாமிஉத் திர்மிதி)
ஆகவே ரமழான் மாத நோன்பைத் தொடர்ந்துவரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்று இறைவனின் அன்பையும் அருளையும் பெற்றுக்கொள்வோம்.
– அப்துல்லாஹ்