Wednesday, May 15, 2024
Home » காசா சிறுவர் நிதியத்திற்கு அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளும் காலம் நீடிப்பு

- பொதுமக்களின் கோரிக்கையின்படி, மே 31 வரை காலத்தை நீட்டிக்க தீர்மானம்

by Prashahini
April 29, 2024 3:47 pm 0 comment

காசாவில் இடம்பெறும் மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட காசா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund) பங்களிப்புச் செய்வதற்கான கால எல்லை 2024 மே 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நன்கொடையாளர்களுக்கு இந்த நிதியத்திற்குப் பங்களிப்புகளை அளிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் 2024 ஏப்ரல் 30ஆம் திகதியுடன் முடிவடைய இருந்தது. ஆனால் நாடளாவிய ரீதியில் பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின்படி, 2024 மே 31 வரை காலத்தை நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டது.

“காசா சிறுவர் நிதியத்திற்கு” பங்களிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, நாடளாவிய ரீதியில் உள்ள பொது மக்கள் இன, மத பேதமின்றி அதனுடன் கைகோர்த்தனர்.

இம்முறை நோன்பு துறக்கும் நிகழ்வுகளுக்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதியத்திற்கு வழங்கியதோடு இதன் முதற்கட்டமாக ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ முகவரகத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அண்மையில் பலஸ்தீன அரசாங்கத்திடம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கையளித்திருந்தார்.

நன்கொடையாளர்களுக்கு 2024 மே 31 வரை தொடர்ந்து பங்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதோடு பங்களிக்க விரும்பும் நன்கொடையாளர்களாக இருந்தால், அந்த நன்கொடைகளை ‘இலங்கை வங்கி தப்ரபேன் கிளையில் (747) 7040016’ எனும் வங்கிக் கணக்கில் அன்பளிப்புத் தொகையை வைப்பு செய்ய முடியும். அதன்பின்னர் பற்றுச்சீட்டை 077-9730396 என்ற எண்ணுக்கு WhatsApp ஊடாக அனுப்புமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், காசா பகுதியில் வாழும் குழந்தைகளுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை அண்மையில் வழங்கிய நிதியுதவிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி தொடர்பான முகவர் அமைப்பின் (UNRWA) ஆணையாளர் நாயகம் பிலிபே லெஸரினி (Philippe Lazzarini), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிய கடிதத்தில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி தொடர்பான முகவர் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட அவசர கோரிக்கைக்கு இலங்கையின் பங்களிப்பு ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி தொடர்பான முகவர் அமைப்பின் பராமரிப்பில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் அத்தியாவசிய மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணி தொடர்பான முகவர் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் நிவாரணத் திட்டங்களுக்கு நிதி வழங்குவதில் உள்ள சிக்கல் நிலை குறித்து மேலும் குறிப்பிட்ட லெஸரினி, அந்தத் திட்டங்களைச் செயற்படுத்துவதில் பங்குதாரர்களின் பங்களிப்பு முக்கியப் பங்காற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனிலுள்ள அகதிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் நிவாரணம் மற்றும் பணிகள் தொடர்பான முகவர் அமைப்பு ஆகியவற்றிற்கு இலங்கை வழங்கிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்த லெஸரினி, எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து ஆதரவை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT