திருத்தந்தை பிரான்சிஸ்
இயேசு தாழ்ச்சியுள்ள மற்றும் அமைதியுள்ள அரசராக, எருசலேமிற்குள் நுழைந்தார் என்றும், இரக்கமுள்ள அவரே நம் பாவங்களை மன்னிக்க வல்லவர், எனவே அவருக்கு நம் இதயங்களைத் திறப்போம் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை வத்திக்கான் புனித பேதுரு பேராலய வளாகத்தில் நடைபெற்ற புனித வாரத்தின் தெடக்கமான குருத்தோலை ஞாயறு திருப்பலியின் இறுதியில் வழங்கிய மூவேளை செப உரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நமது பகைமை, வெறுப்பு, வன்முறை போன்றவற்றிலிருந்து நம்மை விடுவிக்க வல்லவர் இயேசு என்று வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கொலம்பியாவில் இறந்தவர்கள், மாஸ்கோ, உக்ரைன், காசா பகுதியில் போரினால் பாதிக்கப்படும் மக்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து செபித்தார்.
இத்தகைய கொடிய செயல்கள், மனிதாபிமானமற்ற செயல்கள் அனைத்தும் கொலை செய்யாதே என்று கட்டளைப் பிறப்பித்தக் கடவுளைப் புண்படுத்துகின்றன என்றும், இத்தகைய செயல்களை செய்பவர்களின் இதயங்களை இறைவன் மாற்றட்டும் என்றும் கூறினார் திருத்தந்தை.
மோதல்களானது மரணம் மற்றும் துன்பத்தை ஏற்படுத்துவதோடு, பெரிய அளவில் மனிதாபிமானப் பேரழிவையும் ஏற்படுத்துகின்றது என்றும், போரினால் துன்புறும் மக்களுக்காக செபிக்க மறக்க வேண்டாம் என்றும் கூறினார் திருத்தந்தை.
புனித வாரத்தின் இந்நாட்களில் இயேசுவோடு மிக நெருக்கமாக இருக்கவும், உயிர்ப்பின் மகிழ்வை நாம் பெறவும், அன்னை மரியாவிடம் அருள்வேண்டுவோம் என்றும் கூறி சிறப்பு ஆசீரை வழங்கினார் திருத்தந்தை.
மெரினா ராஜ்