கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறையுடன் இணைந்து ‘இரண்டாயிரம் ஆண்டுக்குப் பின்னரான இலக்கிய செல்நெறி’ என்ற தலைப்பில் ஆய்வரங்கை நடத்தியது.
இந்த ஆய்வரங்கம் நேற்றுமுன்தினம் (2023.12.02 சனிக்கிழமை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் (கிழக்கு மாகாணப் பணிப்பாளர்) தலைமையில் இடம்பெற்றது.
ஆய்வரங்கில் சிறப்பு அதிதியாக பேராசிரியர் எம். எம்.பாசீல் (பீடாதிபதி கலை கலாசாரம்) கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த ஆய்வரங்கத்தை அ.சண்முகதாஸ் (வாழ்நாள் பேராசிரியர்) நடத்தினார். இவ்வாய்வரங்கு ஏழு தலைப்புகளுடன் அரங்கேறியது.
அவற்றில் மொழிபெயர்ப்புத்துறையின் செல்நெறியை பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரப், சிறுகதைத்துறையின் செல்நெறியை கலாநிதி ஹனிபா இஸ்மாயில், பெண் எழுத்துக்களின் செல்நெறியை கலாநிதி ம. நதிறா, இலக்கியத்தில் நவீன தொழில்நுட்பத்தின் செல்வாக்கினை கணிமையாளர் மு.மயூரன், திறனாய்வுத்துறையின் செல்நெறியை விரிவுரையாளர் எம். அப்துல் ரஸாக், கவிதைத் துறையின் செல்நெறியை கலாநிதி த.மேகராசா, நாவல்துறையின் செல்நெறியை கலாநிதி எம். சத்தார் பிர்தௌஸ் ஆய்வுகளாக சமர்ப்பித்தனர். ஆய்வுப்பகிர்வின் நோக்கினை ஜப்பான் கக்கயின் பல்கலைக்கழக ஓய்வுநிலை ஆய்வுப் பேராசிரியர் கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், கவிஞர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள், துறை சார்ந்தவர்கள், ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவ மாணவிகள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் கலை நிகழ்ச்சிகளின் இறுதியில் நிகழ்வுக்கு வருகை தந்தவர்களுடன் கருத்து பரிமாற்றமும் இடம்பெற்றது.
இவ்வாய்வரங்கை நிகழ்த்தியவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
எம்.எப்.எம்.நவாஸ் (திராய்க்கேணி தினகரன் நிருபர்)